Wednesday, September 26, 2012


ஓரம் போ ! வால்மார்ட் வண்டி வருது !
க.சுவாமிநாதன் 

தொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய  முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா? என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா! 

2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு "தேச விரோதம்" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே ? என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது " ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது " என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.

யாருக்கு லாபம்! 

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்? ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்! இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.

இது என்ன ஜனநாயகம்! 

போன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!
இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை  கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"
இப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது. 

உலக அனுபவம் என்ன ?

உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி  இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை. 

விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?

இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை. 

நுகர்வோருக்கும் ஆப்பு 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012 அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?

கூடாரத்திற்குள் ஒட்டகம்

10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள்  மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.
ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.

ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!

Friday, April 13, 2012

வின்..வின் ...

வின்..வின் ...

உலகமயத்தில் பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியப் பெரும் தொழிலகங்களுக்கும் 
வெற்றி...வெற்றி.. என்ற (WIN ...WIN ...) நிலைமைதான். மேக்ஸ் நியூயார்க் லைப் நிறுவனத்தின் 26 
சதவீதப் பங்குகளை ஜப்பானின் மிட்சுய் நிறுவனம் ரூ 2731 கோடிகளுக்கு வாங்கப்போகிற 
"டீல்" இதற்கு இன்னொரு உதாரணம்.

இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான அனல்ஜித் சிங்கின் மேக்ஸ் நிறுவனம் இந்த 
இணைவினையில் 70 சதவீதத்தை வைத்துள்ளது. 11 ஆண்டுகளாக கூட்டாளியாக உள்ள நியூயார்க்
லைப் ஆசியச் சந்தையில் இருந்து வெளியேறி வருகிறது. சீனா, கொரியா, தாய்லாந்து, வியட்நாம்
என்கிற வரிசையில் தற்போது இந்தியாவின் "டர்ன்" ஆகும். 

நியூயார்க் லைப் 16 .6 சதவீதப் பங்குகளை நேரடியாகவும் , 9 .37 சதவீதப் பங்குகளை மேக்ஸ் நிறுவனம்
மூலமாகவும்  மிட்சுய் நிறுவனத்திற்கு விர்கப்போகிறது. மூன்று மடங்கு விலையாம். அண்மையில்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜப்பானின் நிப்பான் கம்பெனிக்கு மூன்றரை மடங்கு விலைக்கு விற்றது.
ஒப்பிட்டால் கொஞ்சம் மார்ஜின் கம்மிதான் என்றாலும் லாபம் கொஞ்சநஞ்சமல்ல.

இதில் மேக்ஸ் வாயிலாக விற்கப்படுவதில் மேக்ஸ்சுக்கும் லாபம் கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டியிருக்கிறது. ரூ 182 கோடி மதிப்புள்ள பங்குகள் ரூ 984 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது.
ரூ 802 கோடி லாபம். கடந்த ஆண்டு இந்த இணைவினையில் ஏற்பட்ட மொத்த நட்டமான ரூ 281 
கோடிகளும் இந்த ஒரே டீல் மூலம் சரிக்கட்டப்படுகிறது.

உலகமயப்பேரங்களில் இந்தியத் தொழிலதிபர்களும் பயனடைகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டேட்டா.. உல்டா..   

இந்திய அரசின் புள்ளிவிவரக் குறியீடுகள் நம்பகத்தன்மையை இழந்து கொண்டிருக்கின்றன என்பது 
அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜனவரி 2012 ல் தொழிற்சாலயில் இருந்து வெளிவருகிற சரக்கு 6 .8 சதவீத வளர்ச்சியை எட்டியதாக 
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 1 .1 சதவீதம்தான் வளர்ச்சி என 
தற்போது தெரிவிக்கின்றன. எவ்வளவு பெரிய இடைவெளி? 6 .8 சதவீதம் எங்கே! 1 .1 சதவீதம் எங்கே!
தவறுக்கு காரணமாக சொல்லப்படுவது இன்னும் கேலிக்கூத்தானது. சர்க்கரை உற்பத்தி 58 லட்சம் டன் 
என்பதை சர்க்கரை இயக்குனரகம் தவறுதலாக 1 கோடியே 30 லட்சம் டன் என தகவல் தந்துவிட்டதாம்.
இவ்வளவு வித்தியாசம் வருகிறதே என நிபுணர்கள் யாரும் பார்த்தவுடனே மூளையைக் கசக்க 
மாட்டார்களா! இந்த விவரங்களையெல்லாம் வைத்துதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த 
மதிப்பீடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன.

ஏற்கனவே டிசம்பர் மாதத்தின் ஏற்றுமதித் தொகை அதிகமாக காண்பிக்கப்பட்டது. எவ்வளவு தெரியுமா?
ரூ 47000 கோடிகள். 

பாட்டி கதை ஒன்று உண்டு. ராஜா ஒருத்தன் நாட்டில் எத்தனை காக்கா உள்ளன என்று எண்ணச் சொன்னான்.
தெரியாமல் முழித்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது.ஒரு புத்திசாலி மட்டும் பத்தாயிரத்து முப்பத்து 
மூன்று என்று ஓங்கி அடித்தானாம். ஒன்னு கூடினால் ? என்று ராஜா கேட்க விருந்துக்கு வந்திருக்கும் 
என்றானாம். ஒன்று குறைந்தால் என்று கேட்டவுடன், வெளிநாட்டிற்கு விருந்துக்கு போயிருக்கும் என்றானாம்.
பாட்டி கதையில் இருக்கிற லாஜிக் கூட நம்ப நிபுணர்கள் கணக்கில் இல்லையே.

* கண்ணாடி இங்கே? பூதம் எங்கே?

சோயா பீன்ஸ், கொத்தவரங்காய் விதைகள் விலைகள் எல்லாம் எக்குத்தப்பாய் குதித்ததால் அவை இரண்டும் 
முன்பேர வர்த்தகச் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

அடுத்து கடுகு, பச்சைக் கற்பூரம் எண்ணெய், ஏலக்காய், கொண்டைக்கடலை, மஞ்சள் ஆகியவற்றின் விலைகளின் 
தாண்டவும் இப்போது பூதக் கண்ணாடியின் வரம்புக்குள் வந்துள்ளதாம்.

கற்பூர எண்ணெய் ( MENTHA OIL ) டிசம்பர் 30 ல் கிலோ ரூ 1319 ஆக இருந்தது.ஏப்ரல் 12 , 2012 ல் ரூ 2426 க்கு எகிறிவிட்டது.மூன்றரை மாதத்தில் 82 சதவீத உயர்வு. ஏலக்காய் விலையும் கிலோவுக்கு ரூ 600 லிருந்து ரூ 955 க்கு இதே காலத்தில் தாவியிருக்கிறது. அதே மூன்றரை மாதத்தில் 59 சதவீத உயர்வு.

இந்தச் சதவீதங்கள் எல்லாம் மிகக் குறைவாம். கொத்தவரங்காய் விதைகள் 500 சதவீதம், 1000 சதவீதம் வரை 
உச்சாணிக் கோப்பிற்கு போனதாம்.

முன்பேர வர்த்தகச் சூதாட்டத்திற்கு ஆதரவாகவே அரசு விலைக் கட்டுப்பாட்டை அரசு கைகழுவியது. பூதக் 
கண்ணாடியின் வரம்புக்குள் அரசின் கொள்கைகள் வராவிட்டால் என்ன தேடினாலும் கிடைக்காது. தெரியாது.



Sunday, January 1, 2012

மான்டெக் சிங் அலுவாலியா ! கஞ்சி குடிக்க வழி என்னய்யா !



இந்தியத் திட்டக் கமிசன் சாதாரண மக்கள் பலரின்
திட்டுக்களை வாங்கிய கமிசனாக மாறிப்போயிருக்கிறது.
அவனவன் கைக்கும் வாய்க்கும் எட்டாமல் தவித்துக்
கொண்டிருக்கும் போது தினம்  32 ருபாய் கையில் இருந்தால்
நகர மக்கள் வாழ்க்கையை நடத்திவிடலாம் என்று
சொன்னால் கோபம் வராதா?

இந்தத் திட்டக் கமிசன் புத்திசாலிகள் எங்கே போய்
யாரைச் சந்தித்து கணக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
உச்ச நீதி மன்றத்தில் திட்டக் கமிசன் இப்படி ஒரு அபிடவிட் 
தாக்கல் செய்த மறுநாளே "ஹிந்து பிசினஸ் லைன் " ரூ 32 ஐ
வைத்துக் கொண்டு ஒரு நாளை எப்படித் தள்ள முடியும் என்று
பேட்டி எடுத்தது. 
டெல்லி திட்டக் கமிசனின் வாசலில் வேர்க்கடலை
விற்கிற ஒருவரிடம் போய்க் கேட்டபோது, "நான் போக்குவரத்துக்கு
மட்டுமே ஒரு நாளைக்கு ரூ 30 செலவழிக்கிறேன்.மதியச் சாப்பாட்டில்
காய்கறிகளே சேர்ப்பதில்லை" என்றார். அடப் பாவிகளே இவர்களின்
மூக்குக்கு கீழே நிக்கிற வேர்க்கடலைக்காரரிடம் கூட கேட்கவில்லையா!
சென்னை தி.நகரில் செவாலியே சிவாஜி கணேசன் தெருவில் தள்ளு
வண்டியில் மதிய சாப்பாடு ரூ 30 ஆகும். இப்படி இருக்கும் போது
நகரத்திற்கு ரூ 32 , கிராமத்திற்கு ரூ 26 என்று உச்ச நீதி மன்றத்தில் போய்ச்
சொல்லியிருகிறார்கள்.

சில பேர் திட்டக் கமிசனுக்கு மூளை கெட்டுப் போய்விட்டதா என்று
கேட்கிறார்கள். அது உலகமய மூளை. திட்டக் கமிசனின் இந்த மதிப்பீட்டிற்கு
என்ன நோக்கம்? வளர்ச்சி குன்றிய நாடுகளை விட ( LEAST DEVELOPED
COUNTRIES ) இந்தியாவில் உணவு நுகர்வு குறைவாக உள்ளதே, அதை
எப்படி அதிகரிப்பது என்றல்லவா யோசித்திருக்க வேண்டும். அதுதானே
வறுமை மதிப்பீட்டின் இலக்காக இருக்கவேண்டும். ஆனால் இந்த
புண்ணியவான்களின் நோக்கமே வேறு! எப்படி உணவு மானியத்தைக்
குறைப்பது என்பதே இந்தச் சீத்தலைச் சாத்தனார்களின் மண்டைக்குள்ளே
குடைகிற விஷயம். ஆகவேதான் ரூ 32 போதும் எனத் தடாலடியாய்ச்
சொல்லியிருகிறார்கள். ( உத்சா பட்நாயக்கின் நல்ல கட்டுரை ஒன்று
MACROSCAN இணைய தளத்தில் உள்ளது. படியுங்கள்)

திட்டக் கமிசனின் இம்மதிப்பீடை ஆதரிப்பவர்களும் உண்டு. SWAMINOMICS
என்கிற இணைய தளத்திற்குள் போய்ப் பாருங்கள். சுவாமிநாதன் எஸ்.
அங்கலேச்வர ஐயர்  என்கிற பொருளாதார நிபுணரின் தளம் அது. அவர்
கேட்கிறார். ஏற்கனவே ரூ 24 தானே அளவுகோலாக உள்ளது. இப்போது
ரூ 32 என்றவுடன் எல்லோரும் ஏன் குதிக்கிறார்கள் என்று கேட்டு ஒரு நாளைக்கு
ஒருவர்க்கு ரூ 32 என்றால் 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு எவ்வளவு, அதை
மாதக் கணக்காகப் போட்டால் எவ்வளவு என்றெல்லாம் கணக்குப் போட்டு
இப்படிச் சொன்னால் மககள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று கணக்கு
வாத்தியார் போல வகுப்பு எடுத்திருக்கிறார்.

அங்கலேஸ்வரருக்கு ஒன்றைச் சொல்லவேண்டும். ரூ 24 என்ற அளவுகோலையே
தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் எதிர்த்தார்கள். விமர்சித்தார்கள். எனவே ரூ 32
என்றவுடன் திடீர் எனக் குதிக்கவில்லை. இரண்டாவது ஏன் இப்போது இது
இவ்வளவு விவாதிக்கப்படுகிறது என்பதை அவரைப் போன்றவர்கள் உப்பரிகையில்
இருந்து வீதிகளுக்கு வந்து பார்க்கவேண்டும். இன்றைக்கு இருக்கிற மன்மோகன் சிங்
அரசாங்கம் மக்களிடம் அம்பலமாகி நிற்கிறது. ஊழல்களின் பிரமாண்டம்
தங்களின் வரிப்பணம் அநியாயமாய்ச் சூறையாடப்படுகிற உணர்வை மக்களிடம்
ஏற்படுத்தியுள்ளது.எனவே ரூ 24 க்கு வராத கோபம் ரூ 32 மீது வந்துள்ளது. இதைப்
புரிந்து கொள்ளாமல் ரூ 32 க்கு ஏதோ தினமும் சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும்
சாப்பிட்டு பீடாவும் போட்டுக் கொள்ளலாம் என்பது போலப் பேசுகிறார் அங்கலேஸ்வரர்.

இன்னொன்று, 32 ஆண்டுகளாக இம்மதிப்பீடுகள் அடிப்படையாய் எவ்வளவு கலோரி
உணவு மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது, அதை வாங்குவதற்கு விலைவாசி உயர்வையும்
கணக்கிற் கொண்டு எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற அறிவியல் பூர்வமான
அணுகுமுறை இல்லை. நகர மக்களுக்கு 2100 கலோரி, கிராம மக்களுக்கு 2400 கலோரி
(பின்னர் இது 2200 கலோரி எனக் குறைக்கப்பட்டது) என நிர்ணயிக்கப்பட்டது. 1979 ல்
இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை விட 2011 ல் 17 மடங்கு அதிகமாகியுள்ளது.
இப்போது கொடுக்கிற ரூ 32 ஐ வைத்து 1500 கலோரி நுகர்வைக் கூட உறுதி செய்ய முடியாது
என உத்சா பட்நாயக்கின் கணக்கு சொல்கிறது. இது விவாதிக்கப்பட வேண்டாமா?

அங்கலேஸ்வரர் நடுத்தர வர்க்கத்தின் மீது பாய்ந்து உள்ளார். என்ன சாதாரணமான மககள்
மீது திடீர் கரிசனம்? நீங்கள் உங்கள் வீட்டிற்கு வருகிற வேலைக்காரர்களுக்கு எவ்வளவு
தருகிறீர்கள் என்று கேட்கிறார். அய்யா! ஒரு சமுகத்தில் தொழிலாளியின் கௌரவம்
எப்படி அங்கிகரிக்கப்படுகிறதோ அதன் வெளிப்பாடுகள் கீழ் மட்டம் வரை இருக்கும்.
தனிமனிதர்கள் விதிவிலக்காக இருக்கலாம். இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது
தவறுமில்லை. ஆனால் திருத்தப்பட வேண்டிய இடத்தைவிட்டு 'செல்லிடத்து மட்டும்
சினம் காட்டுவது ஏன் ?" என்பதே கேள்வி.

இந்தச் சமுக அமைப்பில் அதைத் தீர்மானிப்பது யார்? அரசாங்கத்தை "மாதிரி முதலாளி"
என்று அழைத்த காலம் உண்டு. உலகமயம் அதை மறக்கடித்து விட்டது. காரணம்
அரசாங்கம் மாதிரியாக இருந்தால் பன்னாட்டு கம்பெனிகளும், பெரும் தொழிலகங்களும்
பின்பற்ற வேண்டுமே! அதனால் அரசாங்கத்தையே 'ஒருமாதிரி முதலாளியாக' மாற்றிவிடு
என ஆணையிட்டது. தொழிற்சங்கமற்ற உலகம், சங்கம் அமைக்க கூடாது, கூட்டு பேர
உரிமை பற்றி மூச்சு விடக் கூடாது என்பதே இன்றைக்கு நிறுவன உலகின் போக்கு.
அய்யா அங்கலேஸ்வரரே! இதை மாற்றாமல் பாவம் நடுத்தர வர்க்கத்தை மட்டும் கம்பைத்
தூக்கி விரட்டுகிறீர்களே! அந்த கம்பு யாருடைய கம்பு என்பதே எங்கள் கேள்வி!

ரூ 32 என்றவுடன் அல்லது ரூ 26 என்றவுடன் நாம் எல்லோருமே சாப்பாடு பற்றியே
சிந்திக்கிறோம். படிக்கவேண்டாமா? சளி, காய்ச்சல் என்றால் ஊசி போடவேண்டாமா?
மருந்து சாப்பிட வேண்டாமா? சினிமா பார்க்கா வேண்டாமா? திட்டக் கமிசன் கணக்குப்படியே
உணவுக்கு ரூ 18 ( நகரம்) ரூ 14 ( கிராமம்) தான். என்ன கொடுமை. ஒவ்வோர் ஆண்டும்
லட்சக் கணக்கான கோடிகள் பெரும் தொழிலகங்களுக்கு வரிச் சலுகைகளாக
தரப்படுகிறதே! அந்தக் கணக்கை அலுவாலியாக்கள் போட்டுச் சொல்வார்களா! குனிந்து
குனிந்து குடிசைக்குள் நுழையும் எதிர்கால இளவரசர் ராகுல் காந்தியாவது எப்படி
நீங்கள் வயிற்றை நிரப்புகிறீர்கள் என்று அம்மக்களிடம் கேட்டுச் சொல்லாம். எதுவுமே
தெரியாது என்று சொல்கிற "நேர்மையான'' பிரதமரிடம் கேட்பதற்கு நம்மிடம் என்ன
இருக்க முடியும்? 

அய்யாக்கள் எல்லோரிடம் நம்முடைய ஒரே கேள்வி!
ரூ 32 லிலும், ரூ 24 லிலும் வாழ்வது எப்படியய்யா!