Showing posts with label theekathir. Show all posts
Showing posts with label theekathir. Show all posts

Friday, January 10, 2014

பொருளியல் அரங்கம்- தீக்கதிர்- ஜனவரி 4,2014


க.சுவாமிநாதன்
 
சிங்கப்பூரின்`செல்’ குடும்பங்கள்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கை தற்போதுள்ள 54 லட்சம் மக்கள் தொகையை 2030க்குள்ளாக 69 லட்சமாக உயர்த்துவதென முடிவு செய்துள்ளது, இதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை ஒவ்வொரு ஆண்டும் 15,000 லிருந்து 20,000 வரை அதிகரிப்பதெனவும் அறிவித்துள்ளது. தற்போதைய 54 லட்சம் மக்களில் 15,50,000 பேர் - அதாவது சுமார் 29 சதம் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள்தானாம். சிங்கப்பூரின் தேசிய தனிநபர் சராசரி வருமானம் 42,930 டாலர்கள் எனில் கீழ்மட்டத் தொழிலாளர்களில் அதில் 6 ல் ஒரு பங்கையே சராசரியாக பெறுகிறார்கள். மருத்துவம், குடியிருப்பு வசதிகளெல்லாம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிக அரிது. பெரும்பாலும் தனித்து வாழும் இவர்கள் செல்போன், இன்டர்நெட் மூலமாகவே குடும்ப உறவுகளை பராமரித்துக் கொள்கிறார்கள்.

கரூர் வைஸ்யாவில் அந்நிய முதலீடு

கரூர் வைஸ்யா வங்கியில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் (குஐஐ) பங்கை 40 சதம் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. தற்போது தனியார் வங்கிகளில் 49 சதம் வரை ‘ஆட்டோமேடிக் ஒப்புதல் வழியிலும்‘ அதற்கு மேல் 74 சதம் வரை ‘அரசின் ஒப்புதல் வழியிலும்‘ அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படலாம் என்ற வரம்புகள் அமலில் இருப்பதால் அவை மீறப்படாமலிருப்பதைக் கண்காணித்துக் கொள்ளவும் கரூர் வைஸ்யா வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 சதத்திற்கும் அதிகமான அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எந்தவொரு தனியார் வங்கியிலும் பங்குகள் வாங்கினால் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தர வேண்டுமென்பது தற்போதுள்ள விதிமுறையாகும்.விருந்தாளிகள் வீட்டிற்கு சொல்லிவிட்டு வருவது போல வருகிறது அந்நிய முதலீடு.

தள்ளாடும் பங்கு சந்தை

2013ல் ஐபிஓ (INITIAL PUBLIC OFFER ) எனப்படும் கம்பெனிகளின் துவக்க பங்கு வெளியீடுகள் ரூ.1619 கோடிகளையே திரட்டியுள்ளன. இது கடந்த 12 ஆண்டுகளில் காணப்படாத பெரும் சரிவாகும்.2001ல் ரூ.296 கோடிகள் திரட்டப்பட்ட பின்னர் காணப்படும் மிகச் சோர்வான பங்குச் சந்தை ஐபிஓ திரட்டல் இது ஆகும். 2010ல் இத்தொகை ரூ.37,535 கோடிகளாகவும், 2012ல் ரூ.6835 கோடிகளாகவும் இருந்தது.இரண்டாம் நிலைச் சந்தையில் ((Secondary Market) ) நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்களிடம் ஆர்வமின்மை ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.‘ப்ரைம் டேட்டாபேஸ்’ என்ற நிறுவனம் ஐபிஓ சந்தை மீட்சியடைவதற்கான அறிகுறிகள் அண்மையில் தெரியவில்லை என கணித்துள்ளது.

வால்மார்ட்டின் கலப்படம்

உலகின் மிகப்பெரிய சில்லரை வணிக நிறுவனமான வால்மார்ட் தனது சீன கடைகளிலிருந்து ‘கழுதை’ மாமிச உணவை திரும்பப் பெறுவதென முடிவு செய்துள்ளது.சீனாவின் ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64 லட்சம் கோடி) உணவு மற்றும் பலசரக்கு சந்தையில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் வால்மார்ட்டின் சந்தைப் பங்கு 7.5 சதத்தில் இருந்து 5.2 சதம் வரை விழுந்திருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.96 லட்சம் கோடிகள்) வளரப் போகும் சீனச் சில்லரை வணிகச் சந்தையில் வால்மார்ட்டின் வாய்ப்புகளை கழுதைக் கறி விவகாரம் பாதிக்குமென செய்திகள் கூறுகின்றன.கழுதைக் கறி என்று சொல்லி வேறு பிராணிகளின் மாமிசம் கலக்கப்படுவதாக னுசூஹ சோதனையில் தெரியவந்துள்ளது.பிரான்சின் கேரிஃபோர், மெக்டோனால்டு, கேஃஎப்சி போன்ற நிறுவனங்களும் உணவுத் தர சோதனையின் சந்தேக லென்சுக்குள் வந்துள்ளனவாம்.

கொசுறு......

ஷோலே திரைப்படம்38 ஆண்டுகளுக்குப் பின்னர் 3டி படமாக வெள்ளியன்று (3.1.2014) ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.15 கோடி செலவில் வெளி வந்த மெகா பட்ஜெட் படம் 25 கோடி செலவில் தற்போது முப்பரிமாண படமாக ஆக்கப்பட்டுள்ளது.

Saturday, January 15, 2011

பொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்

அடிக்கரும்பு யாருக்கு ?

* வறுமை என்றாலே நினைவுக்கு வருவது ஒரிசாவின் காலகண்டி மாவட்டம்.அங்கு மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலியான ரூ 90 மறுக்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் ( 19 .8 . 2010 ) செய்திகள் வந்தன. கரும்பின் சக்கை கூடக் கிடைக்காத பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

* இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 1149 பேர். இன்போசிஸ் நிறுவனத்தில் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 144 பேர். இவர்கள் கூட நடுக் கரும்புக்காரர்கள்தான்.

* இந்தியாவில் அதிகமான வருமானம் பெறுகிறவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால்தான். ஆண்டு வருமானம் 69.75 கோடிகள். இதை விடுங்கள்! அமெரிக்காவில் அதிக வருமானம் வாங்குபவர் லிபர்ட்டி மீடியாவின் கிரகரி பி. மாபி என்கிற தலைமை நிர்வாகி. ஆண்டு வருமானம் ரூ 393 கோடிகள். ஒரு நாளைக்கு ஒரு கோடியே எட்டு லட்சம். அடிக் கரும்புக்காரர்கள் யாரென்று தெரிகிறதா?

இளநீருக்கு ஆபத்து

இளநீருக்கு வந்துவிட்டது ஆபத்து. கொக்க கோலாவும், பெப்சியும் பெரும் முதலீடுகளோடு இளநீர்ச் சந்தைகளில் குதித்துள்ளனர்.உலகில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இளநீர் காய்ப்பது இந்தியாவில்தானாம். பிரேசிலின் அமாகோகோ நிறுவனத்தை பெப்சி வாங்கியிருக்கிறது. 30 நாட்களுக்கு இளநீரை கெட்டுப்போகாமல் வைத்திருக்கிற தொழில் நுட்பம் ரூ 3 லட்சத்திற்கு கிடைக்கிறது. பாக்கெட்டுகளிலும், அலுமினிய கேன்களிலும் இளநீரை அடிக்கிற பரிசோதனைகள் மைசூரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் நடந்தேறி வருகின்றன.

சில நடுத்தர கம்பெனிகளும் வணிகத்தில் குதிக்கலாம்.ரோட்டோரங்களில் ட்ரை சைக்கிளில் இளநீர்க் காய்களை அடுக்கிக் கொண்டு அரிவாளோடு அண்ணே..அக்கா..என்று கூவி விற்பவர்களுக்கு ஆபத்துதான்!

கொசுறு

* இன்போசிஸ் நிறுவனத்தில் 2010 - 11 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5311 ஊழியர் அதிகமாகியுள்ளனர். இது நிகரக் கூடுதலே ஆகும். 11067 பேர் புதிய நியமனம் பெற்றுள்ளனர். 5756 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு காலாண்டில் எவ்வளவு கூட்டல், கழித்தல் பாருங்கள்!

* கார்களின் பின்பார்வைக் கண்ணாடி ( REAR VIEW MIRROR ) விற்பனையில் மட்டும் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் ரூ 32000 கோடிகள் புழங்குகின்றன. இதில் இன்று 22 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ள மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் விற்பனை பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ 100 கோடிகள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ 1000 கோடிகள். 2010 ல் 6900 கோடிகள். 2015 ல் ரூ 25000 கோடிகளைத் தொடுமாம். கண்ணாடி வாங்குபவர்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் சந்தை வாகனம் ஜாம் ஜாமென்று முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. பஞ்சதந்திரம் கமல் டயலாக் போல பின்னாடி..கண்ணாடி..முன்னாடி...

சூடான செய்தி

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அதற்கான சட்ட வரைவைப் பரிசீலிக்கிற திரு யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச்சக நிலை குழு ஒப்புதல் அளிக்காது என டைம்ஸ் ஆப் இந்தியா ( 13 .1 .2011 ) செய்தி வெளியிட்டுள்ளது. வாய்க்கு பொங்கல் தந்த மாதிரி.. நல்லது நடக்கட்டும்!